Showing posts with label இன்று மூட நம்பிக்கை வியாபாரிகள். Show all posts
Showing posts with label இன்று மூட நம்பிக்கை வியாபாரிகள். Show all posts

Saturday, May 2, 2009

அன்று பகுத்தறிவு வியாபாரிகள் 2

விஞ்ஞானம் வேகமாக வளர்ந்தது. கம்ப்யூட்டர் வரவும் , செல் ஃபோன் வரவும், சாதாரண இந்தியனின், குறிப்பாக தமிழனின் வாழ்வை நன்முறையில் வெகுவாக பாதித்தது. கிராமத்த்தில் விவசாயம் செய்து, வருமானம் குன்றி, வறுமையில் வாடிய விவசாயியின் மகன் பொறியியல் படித்தான். எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் விஞ்ஞானத்தில் வல்லுனனான். அமெரிக்காவும், இங்கிலாந்தும் பறந்து சென்றான். பகுத்தறிவு பிரச்சாரம் வியாபாரம் ஆகவில்லை. பல லட்சம் குவித்த தமிழன் கூடவே குறைவில்லாமல் கவலைகளையும் குவித்தான். கோவில்கள் பெருகின. சாதிக்கொரு அரசியல் கட்சி போலவே, சாதிக்கொரு சாமியாரும் உருவெடுத்தார். கோவில்களும் சாதிச் சாயம் பூசிக்கொண்டன.
பகுத்தறிவு பாது காவலரகள், நாத்திக சாமியார்கள் எலெக்ட்ரானிக் மீடியம் துணையுடன் இக்காலத்தில் நன்கு விற்கக்கூடிய, பக்தியை விற்க ஆரம்பித்து விட்டார்கள். மூட நம்பிக்கைகளை முன்னே வைத்து, உலக தமிழர்களை அணுக ஆரம்பித்து விட்டார்கள். தொலைக்காட்சிகளில் இவர்கள் தொல்லை தாங்க வில்லை.
ஒரு கழகக்கண்மணி அலை வரிசையில், ஒரு சீரியலில், நாயகி முக்கியமான வேளையாக வெளியே போகும்போது பூனை அவள் பாதையில் குறுக்கிட்டு காரியத்தைக் கெடுக்கிறது. கழகக்கண்மணிகளின் மிகப்பெரும் மூத்த தலைவன், பகுத்தறிவின் நாயகன், நெஞ்சுக்கு நீதியை தேடிக்கொண்டே இருப்பவர், அவர்தம் அலை வரிசையில் நாயகி மனத்துயரம் கொண்டு மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து மணியடிக்க, பூ விழுகிறது. அதுவும் சிகப்பு, செம்பருத்திப்பூ. அம்மன் ஒரு வயதான பெண்மணி உருவில் வந்து நல்ல சொல் சொல்கிறாள். நாயகி புல்லரித்துப் போகிறாள்.
என்ன ஒரு வளர்ச்சி! பகுத்தறிவு வியாபாரத்தில் துவங்கி இன்று பக்தி, பக்தி என்று கடவுள் நம்பிக்கை கொண்ட நான் சொல்ல மாட்டேன், மூட நம்பிக்கை வியாபாரம் நன்கு வளர்ந்து விட்டது. பகுத்தறிவிலும் பணம். பக்தி என்ற பெயரில் பகுத்தறிவு குன்றிய நம்பிக்கைகளிலும் பணம்.
வாழ்க தமிழன். வளர்க அவனது பகுத்தறிவு!

அன்று பகுத்தறிவு வியாபாரிகள்

நாற்பது, ஐம்பது வருடங்கள் முன்னர் இவர்கள் கடை விரித்தார்கள். கழகம் என்பது அதன் பேர். பகுத்தறிவு பிரச்சாரம் துவங்கினார்கள். ஒப்புக்கொள்ள வேண்டும். வியாபார தந்திரத்தில் திறமை அவர்களது. மெச்ச வேண்டும். இப்பகுத்தறிவு பிரச்சாரத்தில் மிகவும் கை கொடுத்தது மொழி வெறியும், பார்ப்பன விரோதமும். பிரச்சாரத்திற்குக் கிடைத்தார்கள் திறமையான பேச்சாளர்கள். அடுக்கு மொழியில் ஆவேசமாகப் பேசினார்கள். சாதாரணத் தமிழன், புளகாங்கிதம் அடைந்தான். கைகள் தட்டி ஆரவாரித்தான். வியாபாரம் சூடு பிடித்து விட்டது.

நேற்று வரை, பார்ப்பன நண்பனுடன் தோள் மீது கை போட்டு நடந்தவன் உணர்ச்சிகள் உச்சத்துக்கு சென்றான். பூணூல் அறுத்தான். பெருமை அடைந்தான். ஆங்கில எழுத்துக்கும், இந்தி எழுத்துக்கும் வித்தியாசம் தெரியாதவன் தார் கொண்டு இந்தி எழுத்துக்களை அழித்தான். தலைவர்கள் "வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது" என்று கூக்குரல் கொடுத்தார்கள். கரி கொண்டு சுவற்றில் எழுதுவதிலும், தார் கொண்டு எழுத்துக்களை அழிப்பதிலும், பார்ப்பனனின் பூணூலை அறுப்பதிலும் தான் பகுத்தறிவின் பொருள் அடங்கி இருப்பாதாக எண்ணி இறுமாப்படைந்தான்.

பேச்சுசுத்திறமை உள்ளவர்கள் புகழ் பெற்றார்கள். புகழ் பெற்றவர்கள் பதவியும், பணமும், பேரளவு பெற்றார்கள். அண்ணன், தம்பிகளும், மச்சினன், மச்சினிச்சியும் கூடவே வளர்ந்தார்கள். விரிவான குடும்ப நபர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்களானார்கள். தலைவர்கலுக்கு கூஜா தூக்கி, சேவகம் செய்த தொண்டர்கள், மனைவி, மக்கள் மறந்து, குடும்ப பொறுப்புகள் துறந்து, வீணாய்ப் போனார்கள். தலைவன் வாழ்க என்று கூறி தன் சொந்த குடும்புகளை வீழ்த்தினார்கள். பகுத்தறிவு மலர ஆரம்பித்தது. . . .................................. தொடரும்.