Showing posts with label வராட்டி என்ன?. Show all posts
Showing posts with label வராட்டி என்ன?. Show all posts

Friday, April 23, 2010

பெரியசாமி எங்கே?

நான் திருச்சியில் பள்ளிப் படிப்புப் படித்துக்கொண்டிருந்தேன். அந்த பள்ளி பல விதங்களில் பெருமை பெற்றிருந்தது. அனுபவம் மிகுந்த, தரமான ஆசிரியர்கள். நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள். வருடம் தவறாமல் உயர் எண்ணிக்கையில் தேர்வுகள்.

ஏழாம் வகுப்பில் திடீரென்று பெரியசாமி வந்து சேர்ந்தான். ஆச்சரியம் என்ன என்றால் பெரியசாமி அந்த நாள் வரை பள்ளிக்குப் போனதே இல்லை. படித்ததும் இல்லை. வாய்க்கால் ஓரத்தில் நின்று கொண்டு வருபவர் போவோர்களை வம்பு செய்வதுதான் அவன் முழு நேர வேலை. அவன் அப்பா ஊரில் பெரிய ஆள். ஊரில் இருந்த எல்லா சாராய, கள்ளுக் கடைகளுக்கும் அவர் தான் முதலாளி. ஊரில் ஒரு பய அவன் குடும்பத்தில் யாரையும் கேள்வி கேட்க முடியாது.

பெரியசாமியின் அப்பா கோவிந்தசாமிக்கு திடீரென்று ஒரு ஆசை. தான் தான் பள்ளிக்குப் போனதில்லை. தன மகனாவது பள்ளியில் படிக்க வேண்டுமென்று. எங்கள் பள்ளி தலைமை ஆசிரியரைப் பார்த்து இந்த விஷயத்தைச் சொன்னார். தலைமை ஆசிரியர் மோகன் சார் பதறி விட்டார். ஆனால் சொல்லவும் முடியவில்லை மெல்லவும் முடியவில்லை. கோவிந்தசாமி அவரிடம் "என் மகன் வயசு பசங்க எந்த வகுப்பில படிக்கிறாங்க?" மோகன் சார் "ஏழாவது வகுப்பு!" என்று சொல்லவும், கோவிந்தசாமி, பெரியசாமியை ஏழாவது வகுப்பில் உக்கார வைத்து விட்டுப் போயிட்டார்.

பரிதாபம் என்ன வென்றால், பெரியசாமிக்கு வகுப்புல நடக்கறது ஒரு எழவும் புரியல. பின்னால உக்காந்துகிட்டு நடு நடுல குரல் கொடுப்பான். குரல் வரலேன்னா தூங்கறான்னு அர்த்தம்.


இப்ப என்னன்னா அவன் ஒரு வாரமா வகுப்புக்கு வரதில்ல. தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியரிடம் கேட்டார் "பெரியசாமி விடுமுறை விண்ணப்பம் குடுத்திருக்கிறானா? இல்லையா?" ஆசிரியர் முகுந்தன் மௌனமாக சிரித்தார். அவர் சிரிப்பின் அர்த்தம்: பெரியசாமி விடுமுறை விண்ணப்பம் குடுத்தா என்ன குடுக்காட்டி என்ன? வகுப்புல வந்து ஒண்ணும் புரியாம உக்காந்திருக்க, வந்தா என்ன வராட்டி என்ன? இதுக்கு ஏன் சார் என்ன கேள்வி கேக்கறீங்க?