Showing posts with label வாழ்க இந்தியா. Show all posts
Showing posts with label வாழ்க இந்தியா. Show all posts

Tuesday, October 20, 2009

அரைவேக்காடு விளக்கம்

நமது இந்திய நாட்டின், உள்துறை அமைச்சர் மாண்புமிகு சிதம்பரம் அவர்கள் விருதுநகரில் நாக்சலைட்டுகள் ஏன் நாக்சலைட்டுகள் ஆகிறார்கள் என்பதற்கு அருமையான ஒரு விளக்கம் கொடுத்தார். "உயர் கல்வி வாய்ப்பு கிடைக்காதவர்களே நாக்சல்களாக மாறுகின்றனர்". என்னவொரு விளக்கம். அதுவும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரிடமிருந்து.



பாகிஸ்தானிய நாச வேலைக்காரர்கள் மும்பையில் ஊடுருவி நாச வேலை செய்த பிறகு, சிதம்பரம் உள்துறை அமைச்சரானதில் மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சமீப காலங்களில் நடக்கும், உள்நாட்டு மாவோவிஸ்டுகளின் மற்றும் நாக்சலைட்டுகளின் அட்டகாசங்களைப் பார்க்கும்பொழுதும், மற்றும் அதற்கு பதிலாக சிதம்பரம் அவர்கள் பேசும் பேச்சை கேட்கும்பொழுது விரக்திதான் மிஞ்சுகிறது. நல்ல ஒரு நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள், ஒரு திறமையற்ற உள்துறை அமைச்சராக மாற்றம் பெற்றுவிட்டாரோ என்று அஞ்சத் தோன்றுகிறது. இந்த அச்சத்திற்கு ஊட்டம் அளிப்பது போல் இருக்கிறது விருது நகரில் அவர் தெரிவித்த கருத்து.



நாக்சல்பாரி இயக்கம் என்பது நாட்டின் சுதந்திரக் கோட்பாடுகளுக்கு பல முறைகளில் இன்னல் வகுக்கும் ஒரு மிகப்பெரிய அமைப்பு அது. அவர்களின் நாச வேலைகளை எதிர் கொள்வதற்கு அழ்ந்த அறிவும், நீண்ட சிந்தனையும், தொடரும் செயல் திட்டங்களும், மற்றும் உயர்ந்த கோட்பாடுகளும் தேவை. இது போன்ற ஒரு வரி அரைவேக்காடு விளக்கம், அதுவும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரிடமிருந்து வருவது மிகவும் வருந்தத்தக்கது. இது அவர்தம் இயலாமையை தெளிவாகத் தெரிவிக்கிறது.