Saturday, October 22, 2011

உதிந்து போன உதிரிக் கட்சிகள்

பெருந்தலைவர் காமராஜ் மறைவுடன் செத்துப் போனது காங்கிரஸ் தமிழ் நாட்டில். மேலும், அன்று ஒரு பெரும் கலாச்சார மாற்றம் நிகழ்ந்தது. திராவடர் கழகங்களின் உதட்டுச்சாயப் பேச்சு, தமிழனுக்குத் தேனாக இனித்தது. பார்ப்பனருடன் போட்டியிட்டு வெல்வதை விட அவனை உதைத்து மகிழ்வதே மேல் என்று போதிக்கப் பட்டனர். ஹிந்தி மொழி கற்று வடநாட்டில் சென்று ஆட்சி செலுத்து என்று சொல்லாமல், 'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று வாய்ச்சவடால் பேசி, தமிழனின் ஆண்மை நிலையையயும், தன்மானச் செல்வத்தையும் குறைத்தளித்து, தமிழ் நாட்டைச் சூறையாடத் துணிந்தனர் கழகத்தினர். பகுத்தறிவு, பகுத்தறிவு என்று பேசியே அதனை ஒழித்தளித்து, இலவசப் பொருளாசையை அளவில்லாமல் பெருக்கி, ஆனந்தம் கொண்டனர். ஆனாலும் இன்றைய தமிழ் இளைஞன் சாதி, மத, இன வேறுபாடின்றி பல் துறையிலும் வெற்றி காண ஆரம்பித்து விட்டான். இன்னும் பத்துப் பதினைந்து வருடங்களில், அன்றைய இளைஞர் சமுதாயத்தால் நாம் தமிழ்நாட்டில் நல்லதொரு, உயர்த்ததொரு மாற்றம் காண்போம்.

Saturday, May 28, 2011

அறுவடை காலம்

ஊழலின் விளைவிடம்
ஆயிரத்து ஐம்பதுகளில் நிலங்களை உழுதனர். ஆழ உழுவதற்கு அவர்களுக்கு உதவியவை கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு. நன்கு உழுது முடிந்ததும், விதைகளை சுறு சுறுப்பாக விதைக்க ஆரம்பித்தனர். ஊழல் விதைகளை. ஆட்சியில் அமர்ந்தனர்.

ஆனால் அண்ணா என்று ஒரு தலைவர் இருந்தார். சில பல தவறுகள் இருந்தாலும், தனக்காகவும், தன குடும்பத்திற்காகவும் ஊழல் வழிகளில் சொத்து சேர்க்க விரும்பி இருக்கவில்லை, அதற்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

அண்ணாதுரை அவர்களின் இறுதி காலத்திற்காகக் காத்திருந்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பதில் அவர் இறந்ததும், கலைஞர் சோகக்கவிதை பாடினார். முன்னமே எதிர்பார்த்து தயாரித்து வைத்த கவிதைப் பேச்சு போல் ஒலித்தது. தமிழ்ப் புலமையாலும், பேச்சுத்திறனாலும் பதவியைப் பிடித்தார். முதலமைச்சர் ஆனார்.

தஞ்சை மண்ணின் மைந்தன். விவ்சாயக்கலை குருதியிலும், எலும்புகளிலும், சதைப்பிண்டங்களிலும் வேரூன்றி இருக்க வேண்டும். அரசியல் என்னும் பொது நிலத்தில் வேளாண்மை துவங்கி விட்டது. தமிழ் மக்களின் மனமென்னும் நிலத்தில் விதைத்த ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு வளர்ப்பு என்னும் பசப்புகள், தமிழனை பல வித போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கியது. நிழற் படங்கள், தொலைக்காட்சி, மது மற்றும், இலவசப் பொருட்கள். இன்றைய சாதாரண தமிழன் இவற்றுக்கு போதையாகி அல்லல் படுவது அன்றாட செய்தி. தன்மானத்தில் சிறந்தவன் தமிழன் என்று பேசிப் பேசி அவனது தன்மானத்தை ஒழிப்பதில் வெகுவாகச் செயல் பட்டனர். அமைதிப் பூங்கா தமிழகம் என்று பேசியே, தமிழ் நாட்டின் அமைதியை அழிப்பதில் சிறப்பாக செயல் பட்டனர். சட்டக்கல்லூரி அராஜகம் முதல், காவலர்கள் வழக்கறிஞர்கள் மோதல் தொடர்ந்து பற்பல செயல்கள். ஊழலுக்கும், அராஜகங்களுக்கும் பெயர் போன பல வட மாநில மக்களே வெட்கித் தலை குனிந்திருக்க வேண்டும்.

அறுவடை காலம் நீண்டு தொடர்ந்தது. தினமும் பொங்கல் தான். ஊழலை விதைத்தார்கள். அரசியல் செல்வாக்கையும், பதவிகளையும், மற்றும் பல செல்வங்களையும் அறுவடை செய்தார்கள். நெருங்கிய மற்றும் பறந்து விரிந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், வோட்டுக்கு பணம் என்ற பாசன நீர் செலுத்தி ஊழலை தமிழ் நாடு முழுவதும் பரப்பி விட்டார்கள்.

வினைகளை அவர் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. அறுவடை செய்தே தீர வேண்டும். கண்ணதாசன் அன்றே சொன்னார்:
விதிஎன்று ஒன்றினை வெல்வதும் உண்டு காண்,
வெல்வதும் உன் விதியென வேதன் விதித்ததால்.

Thursday, May 26, 2011

வாழ்க்கைத் தாள்

கண்களை மூடித் திறந்ததாக நினைத்தேன்
உலகம் பல பகல்களையும், இரவுகளையும்
ஒன்றின் பின் ஒன்றாகத் திறந்து மூடின!

நாள் தாள்களை தினம் களைந்ததாக நினைத்தேன்
வாரத்தாள்களும் மாதத்தாள்களும் மணிக்கணக்குகளில்
தானே வீழ்ந்து மண்ணில் மாய்ந்தன.

உன் வாழ்வும் ஒரு நாள் காட்டி தான்
வேகத்தில் உதிர்ந்து விடும் வாழ்க்கைத் தாள்கள்!
மடியட்டும் மனித இறுமாப்பு!
மலரட்டும் மானிட நேயம்