Wednesday, September 30, 2009

விபத்து மிகப்பெரியது




வருடம்: 1982




இடம்: திருச்சி டவுன் ஏரியாவுல தெப்பக்குளத்துக்கும் பர்மா பஜார் கடைகளுக்கும் இடையே நடந்து, புள்ளையார் கோவில் தாண்டி, மாயவரம் லாட்ஜுக்கும், மதுரா லாட்ஜுக்கும் இடையே உள்ளே முக்கு.




சுதாகர் வேகமாக ஓடி வந்தான். மூச்சு இரைக்க இரைக்க, "அண்ணே! ஆக்சிடெண்டு ஆயிடுச்சு அண்ணே, நீங்க வந்து கொஞ்சம் அவுங்கள்ட்ட பேசி என்னோட வண்டிய மீட்டுக்கொடுத்துடுங்க அண்ணே" என்று சொல்லி முடித்தான்.






நானும் நெஞ்சை நிமிர்த்தி, லாவகமாக, மீசையை முறுக்கி விட்டபடி அவனுடன் நடந்தேன். ஐந்து அடி செல்லவும், எனக்கு ஞாபகம் வந்தது. சுதாகருக்கு வண்டி ஓட்ட தெரியாதே. அவன் கிட்ட ஒரு டூ வீலர் கூட கிடையாதே. பிரச்சனை என்ன என்று யோசித்தேன். இருந்தாலும், அவனிடம் கேள்வி கேட்டால், நான் பயப்படுகிறேன் என்று நினைத்து விடுவானோ என்று தோன்றியது. எனவே கேள்வி எதுவும் கேட்காமல் அவனுடன் வேகமாக நடந்து ஆண்டாள் தெருவில் நடந்தேன்.






மதுரா லாட்ஜு தாண்டி, ஒரு பத்தடி போயிருப்போம். மலைக்கோட்ட கோவில் யானை நின்னு வேகமா தும்பிக்கைய ஆட்டிக்கிடுக்கிட்டுருந்தது. அது மேல யானைப் பாகன் உக்காந்திருந்தாரு.




சுதாகரைப் பார்த்ததும், "சாரை சப்போர்டுக்கு கூட்டிக்கிட்டு வந்திருக்கிறீயா?" என்று கேட்கவும் நான் ஆச்சரியத்துடன், கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இருபது வயசு இளைஞன் சுதாகரைப் பார்த்தேன்.




நடந்தது என்ன என்று நான் விவரிக்கிறேன். சுதாகருக்கு இது வரைக்கும் சைக்கிள் ஓட்டக்கூட தெரியாது. இப்பதான் பழக ஆரம்பிச்சுருக்கான். கொஞ்சம் தையிரியம் வரவும், ஆண்டாள் தெருவிலிருந்து, மலைக்கோட்டை பக்கம் செல்லும், சரிவுப்பாறையில் ஏறியிருக்கிறான். திரும்ப இறங்கும்போது வண்டி வேகம் பிடித்து விட்டிருக்கிறது.




ஆண்டாள் தெருவில் அந்தப்பக்கம் நிக்குது யானை. அரண்டு மிரண்டு, விட்டான் நேரே சைக்கிள - யானை ஆட்டிக்கிட்டுருந்த தும்பிக்கைக்கும் கால்களுக்கும் நடுவே. சுவற்றில் சைக்கிளை மோதி யானையின் காலுக்காருகே விழுந்தான் சுதாகர்.




யானைப்பாகன் கேட்டார் : "என்னாப்பா பட்ட்டப்பகலுல, இவ்ளோ பெரிய யானை நிக்கறது உன் கண்ணுக்குத் தெரியல?"




எழுந்து நின்ன சுதாகர் சொன்னான் "யானை நல்லாத்தெரியுதுப்பா. சைக்கிள்ள பிரேக்கு எங்கன்னுதான் தெரியல"




யானைப்பாகன் கிட்ட பேசி, சுதாகர் சைக்கிள மீட்டுக்கொடுத்த கதை வெறும் கொசுறு.


இந்தியாவின் சிறைக்கைதிகள்



அப்பா: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

தாத்தா: அதிகம் இருக்கறது நம்ம நாட்டு சுதந்திரத்துக்காக போராடரவ்ங்க. சில குற்றவாளிகளும் இருப்பாங்க, திருட்டு, பிக் பாக்கெட் அந்த மாதிரி குற்றங்களுக்காக.

நான்: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

அப்பா: குற்றம் செய்து பிடி பட்டவர்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு இது மாதிரி பற்பல குற்றங்கள்.

என் மகன்: ஜெயில்ல யார்லாம் இருப்பாங்க அப்பா?

நான்: முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள், பெரிய பெரிய கம்பெனி உயர் அதிகாரிகள், பெரிய பெரிய டாக்டர்கள், வக்கீல்கள், சார்டெட் அக்கௌண்டண்டுகள், ஆசிரியர்கள், பிரின்சிபால், முன்னாள் மந்திரிகள், அவங்களோட மகன்கள். சுருக்கமா சொல்லணும்னா, இப்ப இருக்கற ஜெயில்ல, அரசு அலுவலகங்கள், ஆஸ்பத்திரிலேருந்து அசெம்ப்ளி, பார்லிமென்ட் வர எதுவேணும்னாலும் நடத்தலாம்.

Monday, September 28, 2009

மறு எண்ணிக்கையில் ஜெயிச்சான் சின்னு!

வருடம்: 1968


இடம்: தென் தமிழ்நாட்டில் ஒரு சிற்றூர்



ரெங்க நகர் கிரிக்கெட் கிளப்பின் கேப்டன் தேர்தல்



அப்பொழுதெல்லாம், ரெங்க நகர் கிரிக்கெட் கிளப்பில் தேர்ந்த வீரர்கள் பலர். எனவே கேப்டன் பதவிக்கு கடுமையான போட்டி. ஐந்து பேர் பெயர் அடிபட்டது. எனவே முடிவு எடுத்தோம், எலெக்க்ஷன் வைத்து தேர்ந்தெடுப்போம் என்று.



ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு எலெக்க்ஷன். மொத்தம் முப்பது ஓட்டுக்கள். இந்த முப்பதுல இருபது பேர் ஸ்பான்சர்ஸ் - அதாவது பேட்டு வாங்க பந்து வாங்க பணம் கொடுத்த பெற்றோர்கள்.



கேப்டன் எலேக்க்ஷனுக்கு நின்னது நாலு பேரு. சுப்பு, வெங்கி, ஜிங்கா மற்றும் சின்னு. எலெக்க்ஷன் ஆஃபீசர், ரெங்க நகர் பள்ளி தலைமை ஆசிரியர். பத்து நாளைக்கு முன்னரே பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது. எலெக்க்ஷனுக்கு முன்னர் வதந்தி கிளம்பிவிட்டது. சுப்பு, வெங்கடாசலம் அப்பாக்கிட்ட, அவுரு பையனுக்கு ஓப்பனிங் பாட்டிங் தருவேன்னும், ஸ்ரீதர் அப்பாக்கிட்ட கொறஞ்சது அஞ்சு ஓவர் ஸ்ரீதருக்குத் தருவேன்னும் பிராமிஸ் பண்ணதா பேச்சு.



ஜிங்கா ஓட்டுரிமை உள்ளவங்க எல்லார் வீட்டுக்கும் காலங்காத்தாலா இலவசமா பால் சப்ளை பண்றதா பேச்சு.


எலெக்க்ஷன் முடிந்து ஓட்டெண்ணிக்கையும் முடிந்தது. தலைமை ஆசிரியர் திரை மறைவிலிருந்து வெளியே வந்து வெங்கி ஜெயுச்சிட்டான்னார். எல்லோரும் கரகோஷம் எழுப்பவும், வெங்கி குதித்து குதித்து ஆடவும், திடீரென்று வேகமாக உள்ளே ஓடிவந்தான் கருவண்டு. கருவண்டுவைக்கண்டதும், பயந்து நடுங்கி ஆட்டத்தை நிறுத்தி ஒதுங்கினர்.


தலைமை ஆசிரியர் தங்கராசுவின், கை கால்கள் வெட வெடவென்று நடுங்கியது. அவர் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, திரைக்குப்பின்னே சென்றான் கருவண்டு. ஐந்து நிமிடத்துக்குப் பின் வெளியே வந்த தங்கராசு சார், வோட்டு திரும்ப எண்ணிப்பாத்தோம், வெங்கி மூணு ஓட்டுல தொத்துட்டான், ஜெயிச்சது சின்னு தான் அப்படின்னு ஒரே போடு போட்டார்.


பின்னாடியே வந்த கருவண்டு, சொல்லிட்டாருல்ல, கெளம்புங்க எல்லாரும், சின்னு தான் கேப்டன், என்று சொல்லவும், எல்லோரும் நிசப்தமாக கெளம்பினார்கள்.


அதுக்கப்புறம் ஒரு நாள், வெங்கி, இந்த எலெக்க்ஷன் ஒரு ஃபிராடு. என்னை எமாத்திட்டாங்கன்னான். சின்னியோட அப்பா சொன்னாரு "தோத்தவங்க ஏமாத்தத்துல இந்த மாதிரி பேசறது சகஜம்னு"


அதுக்கப்பறம், கிரிக்கெட்டு அனுபவமே இல்லாத கருவண்டுவுக்கு டீம்ல இடம் கெடச்சது வேற விஷயம்.

Wednesday, September 23, 2009

வேஷதாரிகளின் பேராசை அரசியல்

பிரமோத் மகாஜன் என்னும் அரசியல்வாதி. பாரதிய ஜனதா பார்ட்டியைச் சேர்ந்தவர். இளமை, உற்சாகம், வேலையில் தீவிரம், புத்திசாலித்தனம் என்று அசத்திக்கொண்டிருந்தார். அவரை பார்க்க, அவர் பேச்சை கேட்க, எனக்குள் ஒரு பேராசை. இந்தியாவுக்கு ஒரு சிறந்த தலைமை சீக்கிரம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு.
அன்று பிரமோத் மகாஜன் அவரது சகோதரனால் கொல்லப்பட்ட செய்தி கேட்டு பெரும் துயரம் கொண்டேன். என் நம்பிக்கை, எதிர்பார்ப்பு பொய்யானது கண்டு பதை பதைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு, அவர் தம் அருமை மகன் ராகுல் மகாஜனைப் பற்றிப் படித்தேன். இது போன்ற அப்பாவுக்கு இவ்வளவு கேவலமான மகனா என்று வியந்தேன்.
மேலும் மேலும் செய்திகள் திரட்டினேன். அவரைப்பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும் கூர்ந்து கவனித்தேன். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் அனைவரிடமும் உரையாடினேன்.
இன்று அமைதியாக அமர்ந்து யோசித்துப் பார்த்தால் புரிகிறது, மற்றும் ஒரு பசுத்தோல் போர்த்திய புலியை கண்டு ஏமாந்தது. என்று விடியும் இந்திய சுதந்திரம் இதுபோன்ற இன்னும் பற்பல வேஷதாரிகளின் பேராசையில் ஊன்றிய, பொறுக்கித்தன அரசியல் அடாவடிகளிலிருந்து.
வாழ்க இந்திய! வளர்க சுதந்திரம்!

சாமானியர் வகுப்பு

அண்ணாச்சி! தரூர்னு ஒருத்தரப்பத்தி ரொம்ப பேச்சு அடிபடுதே, அவுரு யாரு அண்ணாச்சி?


ஒனக்கு என்ன தெரியும்? அதச்சொல்லு மொதல்ல!


எனக்கு தெரிஞ்சதெல்லாம் இதுதான் அண்ணாச்சி. அவுரு ஒரு சென்ட்ரல் மினிஸ்டரு. சோனியா அம்மா, எல்லாரும் சிக்கனமா செலவு பண்ணனும். சாமானிய வகுப்புலதான் போகணும்னு சொல்ல, இவுரு, சாமானிய வகுப்புன்னா கால்நடைகள் வகுப்புன்னு ஏதோ சொல்லுப்புட்டாறு. அம்புட்டுக்கிட்டாறு, தும்பிட்டிக்கா பட்டாரு. பெரிய பெரிய அரசியல் வாதிகள்லேருந்து, டீக்கடை பய்யன் வரைக்கும் எல்லாரும் பிடி பிடின்னு அது.
அது ஒண்ணுமில்ல தம்பி. ஏதோ தமாசா எழுதினாரு. சிரிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கணும். சும்மா ஊதி ஊதி பெருசா ஆக்கிட்டாங்க. ஏன்னா, எல்லா விஷயங்கள்ளையும், அவுனுக்கு என்ன லாபம்னு பாப்பான் அரசியல்வாதி. இதப்பாத்து சாமானிய மனுஷன் ஏமாறக்கூடாது.
நீங்க சொல்றத நூத்துக்கு நூறு ஒப்புக்கறேன் அண்ணாச்சி! ஆனா சாமானிய வகுப்பப்பத்தி சொன்ன தரூர் அண்ணன், தான் உங்காத்திருக்கற பார்லிமேன்டப்பத்தி ஏன் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறாரு. இவரோட அங்க உங்காத்திருக்கரவுங்கள்ள கிரிமினல் குற்றங்களுக்காக கைதாகி, தண்டனை பெற்று, பெயிலில் வெளியே வந்தவங்கன்னு கூட்டமே இருக்கே அண்ணே, அதப்பத்தி அவுரோட அபிப்பிராயம் என்னன்னு கேட்டு சொல்லுங்க அண்ணே!

Friday, September 18, 2009

வாயில வருது!

தரூர், தரூர் னு ஒரு அரசியல்வாதி. இவுரு ஒண்ணும் வயசான சக்கர நாற்காலி, அல்லது ஊன்றுகோல் அரசியல் வாதி இல்ல. தெருப்போறுக்கியா சுத்திக்கிட்டு இருந்து ரெண்டு மூணு கொலை கேசுல மாட்டி வெளில வந்த ரெகுலர் அரசியல்வாதி இல்ல.




ரொம்ப படிச்ச புத்திசாலி அரசியல்வாதி. இப்பத்தான், இப்பத்தான் வெளிநாடு உறவுகள் துறையில வேல பண்ணது போதும். நம்ம நாட்டு மக்களுக்காக இனிமே முழுசா பாடு படணும்னு முடிவு பண்ணி, காங்கிரசுல தன்னை இணைச்சுக்கிட்டாறு. சிங்கு அண்ணன், சரி போகட்டும், படிச்சவரா இருக்காரே உதவியா இருக்கும்னு, எலெக்சன்லையும் நிக்க வச்சாரு, மந்திரி பதவியும் போட்டு குடுத்தாரு.




தரூர் அண்ணாச்சியும், சரி! இந்தியாவுல ஏழை எளிய மக்களுக்கு பாடு படறத்துக்கு நல்ல வாய்ப்பு கிடச்சிடிச்சுன்னு அஞ்சு நட்ச்சத்திர ஓட்டல்ல உங்காந்துக்கிட்டு தேமேன்னு வேலைய பாத்துக்கிட்டிருந்தாரு. இந்த சோனியா அம்மா சும்மா இல்லாம 'எளிமை' அது அதுன்னு பேஜாரு பண்ணி, ஒட்டல காலி பண்ணும்படியா ஆயிடிச்சு. அது போதாதுன்னு இனிமே நம்ம எல்லாரும் பிளேன்ல சாதாரண வகுப்புல தான் போணும்னு சொல்லிட்டு அதே மாதிரி போகவும் ஆரம்பிச்சிட்டாங்க மிநிஸ்டருங்க.




தரூர் நாக்குல சனி. சாரி! தரூர் பேனால சனி. சரி, கால்நடைகள் போற வகுப்புல, பசுமாடு கூட்டத்தோட நானும் போறேன்னு, நக்கலா சொல்லிப்புட்டாரு - எழுதிப்புட்டாரு.




இதைக்கேட்டதும், எங்க பக்கத்து வீட்டு மாமா, சங்கர நாராயணன், பயங்கர கோபமாயிட்டாறு. ஏன்னா, அவுரும் அடிக்கடி, பய்யன பாக்கறேன், பொண்ண பாக்கறேன், பேத்திக்கு ஒடம்பு சரியில்லன்னு ஃபிளைட்ட புடிச்சுடுவாறு. இப்போதைக்கு தரூர புடிச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு.





"அகராதி! அகராதி! படிச்சு பெரிய பதவில இருந்தா மட்டும் போறாது. பணிவு வேணும். நாவடக்கம் வேணும். சொல்லுடா, தன் நாக்க கன்ட்ரோல் பண்ண முடியாதவன் என்ன பண்ணி கிழிச்சுடுவான். அவனோட ஃபோன் நம்பர் எங்கிட்ட இருந்தா காசு போனா போறதுன்னு, கால் போட்டு கிழிச்சுடுவேன்!"





அவர சமாதானம் பண்றதுக்குள்ள போதும்னு ஆயிடிச்சு. மெதுவா பையன்ட்ட கேட்டேன் "நீ என்னடா சொல்ற தரூர் கருத்தப்பத்தி?" அவன் சுருக்கமா சொன்னான்: "வாயில வந்துடப்போவுது உடுங்கப்பா!"

Tuesday, September 15, 2009

பெருக்கெடுத்து ஓடும் புரட்சி

உத்தரப் பிரதேசத்தில் நோய்டா என்று ஒரு நகரம். தில்லி மாநகரை தொட்டடுத்த ஊர். கடந்த இருபது வருடங்களில் பெரு வளர்ச்சி அடைந்த நகரம். இங்கு பல மாநிலங்களிலிருந்து வந்த பல வகுப்பு மக்கள் வாழும் ஒரு உயர் நகரம். மக்களின் உழைப்புக்கு உதாரணம் இந்நகரின் வளர்ச்சி.


அவங்க, லட்சக்கணக்கான மக்கள், உழைத்து சம்பாதித்து கட்டிய வரிப்பணத்தை நல்ல முறையில் செலவிடவேண்டாமா? அதுக்காகவே தன் வாழ்கையை அர்ப்பணித்த, அர்ப்பணிக்கும் அக்கா மாயாவதி, இரண்டாயிரத்து இருநூறு கோடி ரூபா செலவழிச்சு புரட்சி பண்ணப்போறாங்க.
இந்தப்புரட்சி ஒண்ணும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் தெரியாத புரட்சியில்ல. தமிழ் நாடு இப்புரட்சில ஒரு முன்னோடி. வழிகாட்டி. சிலை புரட்சி. செத்தவங்க, இன்னும் சாகாம இருக்கறவங்க எல்லாருக்கும் சிலை வக்கிறதுக்காக இரண்டாயிரத்து இருநூறு கோடி ரூபா.
"இம்புட்டு ரூபா இருந்தா எவ்வளுவு லட்சம் பேரு எவ்வளுவு நாளைக்கு சாப்பிடலாம்". "பல ஆயிரம் பேருக்கு வேலை குடுக்கற மாதிரி தொழில் ஆரம்பிக்கலாமே" அது இதுன்னு புத்திசாலித்தனமா பேசறதா சில பேரு நெனைக்கிறாங்க. சாப்பாடு எப்பவும் இருக்குப்பா. சரித்திரம் தெரிய வேண்டாமா? வரும் சந்ததிகளுக்கு?
அப்படி என்னையா சரித்திரம்? அரசியல்வாதிகள்னு ஒரு சமூகம் இருந்தது. ஆங்கிலேயர்ட்ட இருந்து இந்தியா சுதந்திரம் வாங்கினதும், மழைக்காலத்துல கெளம்பற விட்டில் பூச்சி மாதிரி பொறந்த ஒரு சமூகம். விட்டில் பூச்சியாவது போகட்டும், ஒரு ரெண்டு மணி நேரம் பறந்துட்டு பொசுக்குனு போயிடும். இந்த பூச்சி சமூகம் இருக்கே, இது ஆட்டக்கடிச்சு, மாட்டக்கடிச்சு, கடசில மனுஷன கடிச்சு ரத்தம் பூரா உறிஞ்சிடும். மனுஷ உருவத்துல பொறந்தாலும், நரியாகி, ஓனாயாகி, நாட்டையே கொள்ளையடிச்சு, தனது விரிவான குடும்பங்களுக்கு சொத்து சேத்த, வெக்கம் கெட்ட சமூகம்னு தான் நம்ம சந்ததிகள் பேசும். இதுதான் வருங்கால உண்மை.

Sunday, September 6, 2009

இந்தியாவில் எதுவும் நடக்கும்

அண்ணாச்சி! இந்தியாவிலேயே பணக்கார குடும்பம் எது அண்ணாச்சி?



பல பேரு தோணுது, ஆனா என்னால குறிப்பா சொல்ல முடியாது கண்ணா. ஏன்னா எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது.


சும்மா, ஒரு குத்து மதிப்பா சொல்லுங்க அண்ணே. முதல் இடம் தெரியாட்டாலும் பொதுவா சொல்லுங்க அண்ணே.



எவ்வளவோ பெரிய பெரிய தொழில் குடும்பங்க இருக்கு, டாட்டா, பிர்லா, அம்பானி, மிட்டல், இதெல்லாம் வடக்கே - தெற்கே சொல்லணும்னா டி.வி.எஸ். குடும்பம், எம்.ஆர்.எஃப், விப்ரோ, இனஃபோசிஸ், சங்கர் சிமெண்ட்ஸ், இது மாதிரி நிறைய குடும்பங்கள் இருக்கு. இந்த குடும்பங்கள்ல பெரிய குடும்பங்கள்னா, பணத்தால மட்டுமல்ல. பல பெருமைகள் உண்டு. சின்ன அளவுல கம்பெனி ஆரம்பித்து, தங்களோட நேரம், சுதந்திரம் அம்புட்டையும் தியாகம் செஞ்சு உருவாக்கினாங்க. அது மட்டுமல்ல, நாட்டுல லச்சக்கணக்கான பேருக்கு வேலை வாய்ப்பு உண்டாக்கினாங்க. இந்த கம்பெனிகளெல்லாம் உண்டாக்கினவங்களப் பாத்தா கையெடுத்து கும்பிடணும். பல ஆயிரம், சொல்லப்போனா பல லட்சம் குடும்பங்களுக்கு கடவுள் மாதிரி. அது சரி, இதெல்லாம் நீ எதுக்கு கேக்கிற?




அதுல்லண்ணே. ஒரு நியூஸ் படிச்சேன். மாயாவதின்னு ஒரு அம்மா 2007 -2008 ல அம்பானி, அது யாருண்ணே, முகேஷ் அம்பானி, அவுர விட அதிகமா வருமான வரி கட்டுனாங்களாம்மா. அவுங்க கம்பெனி பேரு என்னண்ணே? அவுங்க எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை போட்டு குடுத்திராக்கங்கண்ணே.


முட்டாள்! முட்டாள்! அவுங்க கம்பெனி நடத்தலடா. உத்தரப்பிரதேச முதல் மந்திரி. பகுஜன் சமாஜ் பார்ட்டி கட்சித்தலைவி.


பின்ன எப்படிண்ணே? புரியலையே. இந்த கட்சி எப்ப ஆரம்பிச்சுதண்ணே?


இந்த கட்சிய கன்ஷி ராம் ங்ரவரு, 1984 ல ஆரம்பிச்சாரு. அரசு அலுவலகத்துல குமாஸ்தாவா இருந்தாரு மாயாவதியோட அப்பா. பள்ளி, கல்லுரிகள்ள மாணவர் தலைவியாக இருந்து அரசியல்ல நுழைஞ்சாங்க.


அடேங்கப்பா! கம்பெனியே ஆரம்பிக்காம, முதலீடே பண்ணாம இவ்ளோ பணமா? எப்படிண்ணே இம்புட்டு பணம் வந்திச்சு?



அய்யரு பாஷைல சொல்லணும்னா - அபிஷ்டு, அபிஷ்டு, அதுதாண்டா அரசியல். இந்திய அரசியல்ல எதுவேணாலும் நடக்கும். ஏன்னா, மத்த நாட்டு மக்கள்ட்ட அதிகமா இருக்கிற ஒண்ணு, கொஞ்சம் கூட கிடையாது நம்ம கிட்ட.
என்னன்னே அது?
அதுவா? அது பேரு தேசப்பற்று!
ஊழல் அரசியல்வாதிகள் , ஊழல் அரசு அதிகாரிகள், அதுக்கு மேலா உணர்வற்ற, வெட்கங்கெட்ட, கோழைகளாகிய நாம். பொது மக்கள். அதாவது நானும் , நீயும்.

வாழ்க இந்தியா ! மீண்டும் வளர்க தேசப்பற்று!