Saturday, May 26, 2012

இந்தியாவில் என்றாவது ஒரு நாள் .............



சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா தினத்தாளில் சித்தார்த் பாட்டியா என்பவர் ஓர் அருமையான கட்டுரை எழுதி இருந்தார். அதில் இந்தியாவில் மிக அதிகப் பணம் படைத்தவர்களும், அதிகாரத்திலிருப்பவர்களும், எவ்வாறு தேசத்தின் விதி வரம்புகளை மீறி செயல் படுகிறார்கள். அநியாயங்களையும், அநீதிச்செயல்களையும்  தம்போக்கில் செய்து கொண்டு, ஆணவத்தோடு தறி கேட்டு அலைகிறார்கள் என்பதை விவரித்திருந்தார். கட்டுரை முடிவில் ஒரு வினா எழுப்பி இருந்தார். பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டே வந்த பொருளாதாரத்தில் நடுத்தர, மற்றும் கீழ்த்தட்டு வகுப்பினர் ஒருநாள் வெகுண்டு எழுந்தால் என்னவாகுமென்று.

இதைத்தொடர்ந்து நான் இந்நாட்டிலும், அயல் நாட்டிலும் வாழும் நண்பர்களுடன் உரையாடும்போது, எங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இந்தியாவிலும் என்றாவது ஒரு நாள் ஃபிரெஞ்சுப் புரட்சி போல், இந்திய சுதந்திரப் போராட்டம் போல் ஏதாவது ஒன்று நிகழுமா என்று. பலரும், இன்றைய இளைஞன் அதிக சமுதாய அறிவு பெற்றிருக்கிறான், உலகத்தை அங்கு சென்று பார்க்கிறான். நிச்சயமாக நடந்தே தீரும் என்று உறுதியாகக் கூறுகின்றனர். நான் அவர்கள் பலரின் எண்ணங்களிலிருந்தும் மாறு பட்டு தனித்து நிற்கிறேன்.

என் எண்ணங்களை சிறிதே இங்கு பிரதிபலிக்கிறேன். முதலில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக்கொள்வோம். மகாத்மா காந்தியை உலகம் முழுதும் பாராட்டுகிறது. மனித வள மேம்பாட்டு சிந்தனைகளில் Leadership பாடங்களில் அவரை முன்னுதாரணமாகக் காட்டுகின்றனர்.  ஆனால் அவர் பிறந்த மண்ணிலேயே, இன்று பலர் தனிப்பட்ட சுய நலக்காரணங்களுக்காக அவரை கடுமையாக நிந்திக்கின்றனர். அது ஒரு புறமிருக்கட்டும். மகாத்மா காந்தியுடன் இருந்த தலைவர்கள் யார் யார்? நம் நாட்டு சுதந்திரத்துக்காக உழைத்தவர்கள் யார்? சர்தார் வல்லப்பாய் படேல், கோபால கிருஷ்ண கோகலே. தாதாபாய் நவ்ரோஜி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர். இராஜேந்திர பிரசாத். பாரதியார், பிரகாசம் இப்படியான பெயர்கள் பல நூறு.

ஒரு மாற்றத்திற்கு இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் பெயர் சொல்லுங்கள், சரத் பவார் - மகாராஷ்டிர நாட்டின் ஊழல் உறைவிடம், ஒவ்வொரு விவசாயியின் மரணத்திலும் மனக்கணக்கில் கோடி சேர்க்கும் கோமான். கருணாநிதி - தகரப் பெட்டியுடன் (அவர் சொல்படியே) சென்னை வந்து பல தலைமுறைகளுக்கும் தொடருமளவு பொருளீட்டி, விரிந்து பரந்த உறவினர்களுக்கும் பொருளீட்டும் பாடங்களைத் தெளிவாகப் போதித்த புனித மகான். 'நெஞ்சுக்கு நீதி' தேடிக்கொண்டே இருக்கும் உத்தமன். எந்த கட்சியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு சமூக நிறுவனத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். இளைய சமுதாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அறிய தலைவனை எனக்குக் காட்டுங்கள். காந்திக்கு ஒப்பாக, படேலுக்கு ஒப்பாக, கோகலேவுக்கு ஒப்பாக, நேதாஜி சுபாஷ் சந்திரா போசுக்கு ஒப்பாக.

அப்துல் கலாமில்லையா என்று நீங்கள் சொல்லலாம். அப்துல் கலாம் ஒரு உன்னதமான இந்தியர். சந்தேகமில்லை. எனினும் அவரால் புரட்சிக்களம் இறங்க முடியுமா......யோசித்துப் பாருங்கள். அன்னா ஹசாரேவுடன் இணைந்தோ, பாபா ராம்தேவுடன் இணைந்தோ செயல்படுவாரா............முடியாது...........அவர் போக்கு தானி. அவர் செயல்திறன் வேறு வகையானது. ...............தொடரும்

No comments: