Thursday, June 7, 2012

ஆணவம் அன்றொரு நாள் அடங்கும்

அறுவடை காலம்
ஊழலின் விளைவிடம்
ஆயிரத்து ஐம்பதுகளில் நிலங்களை உழுதனர். ஆழ உழுவதற்கு அவர்களுக்கு உதவியவை கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் ஹிந்தி எதிர்ப்பு. நன்கு உழுது முடிந்ததும், விதைகளை சுறு சுறுப்பாக விதைக்க ஆரம்பித்தனர். ஊழல் விதைகளை. ஆட்சியில் அமர்ந்தனர்.

ஆனால் அண்ணா என்று ஒரு தலைவர் இருந்தார். சில பல தவறுகள் இருந்தாலும், தனக்காகவும், தன குடும்பத்திற்காகவும் ஊழல் வழிகளில் சொத்து சேர்க்க விரும்பி இருக்கவில்லை, அதற்குண்டான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

அண்ணாதுரை அவர்களின் இறுதி காலத்திற்காகக் காத்திருந்தனர். ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்பதில் அவர் இறந்ததும், கலைஞர் சோகக்கவிதை பாடினார். முன்னமே எதிர்பார்த்து தயாரித்து வைத்த கவிதைப் பேச்சு போல் ஒலித்தது. தமிழ்ப் புலமையாலும், பேச்சுத்திறனாலும் பதவியைப் பிடித்தார். முதலமைச்சர் ஆனார்.

தஞ்சை மண்ணின் மைந்தன். விவ்சாயக்கலை உள்ளுக்குள் வேரூன்றி இருக்க வேண்டும். அரசியல் என்னும் பொது நிலத்தில் வேளாண்மை துவங்கி விட்டது. தமிழ் மக்களின் மனமென்னும் நிலத்தில் விதைத்த ஹிந்தி எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மற்றும் பகுத்தறிவு வளர்ப்பு என்னும் பசப்புகள் பொருளீட்டத் துவங்கி இருந்தன. தன்மானத்தில் சிறந்தவன் தமிழன் என்று பேசிப் பேசி அவனது தன்மானத்தை ஒழிப்பதில் வெகுவாகச் செயல் பட்டனர். அமைதிப் பூங்கா தமிழகம் என்று பேசியே, தமிழ் நாட்டின் அமைதியை அழிப்பதில் சிறப்பாக செயல் பட்டனர். சட்டக்கல்லூரி அராஜகம் முதல், காவலர்கள் வழக்கறிஞர்கள் மோதல் தொடர்ந்து பற்பல செயல்கள். ஊழலுக்கும், அராஜகங்களுக்கும் பெயர் போன பல வட மாநில மக்களே வெட்கித் தலை குனிந்திருக்க வேண்டும்.

அறுவடை காலம் நீண்டு தொடர்ந்தது. தினமும் பொங்கல் தான். ஊழலை விதைத்தார்கள். அரசியல் செல்வாக்கையும், பதவிகளையும், மற்றும் பல செல்வங்களையும் அறுவடை செய்தார்கள். நெருங்கிய மற்றும் பறந்து விரிந்த குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், வோட்டுக்கு பணம் என்ற பாசன நீர் செலுத்தி ஊழலை தமிழ் நாடு முழுவதும் பரப்பி விட்டார்கள்.

வினைகளை அவர் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. இப்பொழுது மறுபடியும் ஹிந்தி எதிர்ப்பு,  பார்ப்பன எதிர்ப்பு, திராவிட நாடு திராவிடனுக்கே என்று துவங்கி விட்டார். மூப்படைந்து விட்டார் பாவம். இன்றைய நிஜங்கள் அவர் கண்களுக்குப்  புலப்படவில்லை.

சற்கர நாற்காலியில் அமர்ந்து நடை இயக்கம் நின்றிருந்த போதிலும், நெஞ்சுக்கு நீதி இன்னமும் தேடிக்கொண்டிருந்த போதிலும், ஆழ் மனதில் குடி கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சி, பொறாமை, பணிவின்மை அனைத்தும் ஒருங்கே எதிரொலித்தன சமீபத்திய பேச்சுக்களில். ஆணவம் ஒரு நாள் அடங்கும். அந்நாள் வெகு தூரத்திலில்லை.  

No comments: