Friday, January 8, 2010

விழித்தெழு இந்தியா, விழித்தெழு!

ஹரியானா மாநிலத்தில் ராதோட் என்னும் உயர் போலீஸ் அதிகாரி. பெரும்பாலான அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் மமதை. தான் நினைத்ததைச் செய்யலாம் என்ற அதி சுதந்திரப் போக்கு. செயல். இதன் உரு வடிவம், டென்னிஸ் வீராங்கனை ருசிகா என்ன்ற பெயர் கொண்ட பதினான்கு வயதுடைய பெண்ணின் மீது அவன் கொண்ட காம வெறி. அவள் மீது அவன் செய்த பலாத்காரம். அவள் பணிந்து போக வில்லை. வெகுண்டு எழுந்தாள். தப்பி ஓடினாள். அவள் உயிர் தோழி ஆராதனா, ராதோட் செய்த ஈனச்செயலை, நேரில் கண்டாள். தோழிக்குத் தோள் கொடுத்தாள். போலீசில் புகார் செய்ய அக்குடும்பத்தை ஊக்குவித்தாள்.


உயர் போலீஸ் அதிகாரியின் மீது பலாத்காரப் புகாரா? பொறுக்குமா, போலீஸ் துறை. விட்டுவிடுவானா காமுகன், ராதோட். ருசிகாவின் குடும்பத்திற்கு இன்னல் பல கொடுத்தான். வேடிக்கை என்னவென்றால், காமுகன், ராதோடின் மகளும் ருசிகாவும் ஒரே பள்ளியில் படித்து வந்தார்கள். ராதோடின் மகளுக்கு அது அவமானமாக இருந்தது. தன் தரம் கேட்ட தந்தையின் உதவியுடன், ருசிகாவை பள்ளி நிர்வாகம் பள்ளியை விட்டு வெளியேற்றச் செய்தாள்.

இது மட்டுமா, ருசிகாவின் அண்ணன் மீது பல பொய்யான வழக்குகள் போட்டு பல முறை சித்திரவதை செய்தனர். ருசிகாவின் குடும்பத்தினர் தளர்ந்து போய் விடவில்லை. ராதோடின் மீதான வழக்கை திரும்பப் பெறவில்லை. ஆவேசம் கொண்ட ராதோட் தொடர்ந்து ருசிகா குடும்பத்துற்கு இன்னல் கொடுத்தான். கடைசியாக, தன்னால் தன் குடும்பத்திற்கு, குறிப்பாக அண்ணனுக்கு நடக்கும் கொடுமைகளை காணச்சகிக்காமல் ருசிகா தற்கொலை செய்து கொண்டாள்.

அவள் உயிர் தோழி ஆராதனாவும் அவள் குடும்பத்தினரும் ராதோடை விடவில்லை. வழக்கு தொடர்ந்தது. திருமணமாகி ஆஸ்திரேலியா சென்ற தோழி தொடர்ந்து வழக்கை வாதாடினாள்.

குற்றவாளி ராதோட், சன்மானங்கள் பல பெற்றான். விருதுகள் பல பெற்றான். பதவி உயர்வுகள் பெற்றான். ஹரியானாவின் டி.ஜி.பி. பதவி பெற்றான். வழக்கு தொடர்ந்தது. குற்றவாளி தண்டிக்கப்பட்டான். ஆறு மாத சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம். தீர்ப்பு வந்ததுமே பெயிலில் வெளியானான். தற்பொழுது அவனுக்காக அவன் மனைவி அபா நீதி மன்றத்தில் வாதாடுகிறாள். நடப்பதெல்லாம், பத்திரிகைகளின் வியாபாரம் என்கிறாள். கணவனைச் சிறை தண்டனையிலிருந்து காப்பாற்ற, என்ன விலை வேணுமானால் கொடுக்கத் துணிந்து நீதிக்கு எதிராகச் சோரம் போகிறாள்.

ருசிகாவின் குடும்பத்தினரும், அவள் தோழி ஆராதனாவின் குடும்பத்தினரும் தங்கள் முற்றுகையைத் துவங்கி விட்டார்கள். பொது மக்கள் பெருமளவில் ஆதரவு கொடுக்கிறார்கள். பத்திரிகை உலகம் கை கொடுக்கிறது. வெற்றி நிச்சயம். காமுகன் சிறை படுவான். குறைந்தது பத்து வருடங்கள் ஜெயில் வாசம் உறுதி.


தூக்கம் போதும் இந்தியனே!


விழித்தெழு, இந்தியா விழித்தெழு!




No comments: