Monday, September 28, 2009

மறு எண்ணிக்கையில் ஜெயிச்சான் சின்னு!

வருடம்: 1968


இடம்: தென் தமிழ்நாட்டில் ஒரு சிற்றூர்



ரெங்க நகர் கிரிக்கெட் கிளப்பின் கேப்டன் தேர்தல்



அப்பொழுதெல்லாம், ரெங்க நகர் கிரிக்கெட் கிளப்பில் தேர்ந்த வீரர்கள் பலர். எனவே கேப்டன் பதவிக்கு கடுமையான போட்டி. ஐந்து பேர் பெயர் அடிபட்டது. எனவே முடிவு எடுத்தோம், எலெக்க்ஷன் வைத்து தேர்ந்தெடுப்போம் என்று.



ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு எலெக்க்ஷன். மொத்தம் முப்பது ஓட்டுக்கள். இந்த முப்பதுல இருபது பேர் ஸ்பான்சர்ஸ் - அதாவது பேட்டு வாங்க பந்து வாங்க பணம் கொடுத்த பெற்றோர்கள்.



கேப்டன் எலேக்க்ஷனுக்கு நின்னது நாலு பேரு. சுப்பு, வெங்கி, ஜிங்கா மற்றும் சின்னு. எலெக்க்ஷன் ஆஃபீசர், ரெங்க நகர் பள்ளி தலைமை ஆசிரியர். பத்து நாளைக்கு முன்னரே பிரச்சாரம் சூடு பிடித்து விட்டது. எலெக்க்ஷனுக்கு முன்னர் வதந்தி கிளம்பிவிட்டது. சுப்பு, வெங்கடாசலம் அப்பாக்கிட்ட, அவுரு பையனுக்கு ஓப்பனிங் பாட்டிங் தருவேன்னும், ஸ்ரீதர் அப்பாக்கிட்ட கொறஞ்சது அஞ்சு ஓவர் ஸ்ரீதருக்குத் தருவேன்னும் பிராமிஸ் பண்ணதா பேச்சு.



ஜிங்கா ஓட்டுரிமை உள்ளவங்க எல்லார் வீட்டுக்கும் காலங்காத்தாலா இலவசமா பால் சப்ளை பண்றதா பேச்சு.


எலெக்க்ஷன் முடிந்து ஓட்டெண்ணிக்கையும் முடிந்தது. தலைமை ஆசிரியர் திரை மறைவிலிருந்து வெளியே வந்து வெங்கி ஜெயுச்சிட்டான்னார். எல்லோரும் கரகோஷம் எழுப்பவும், வெங்கி குதித்து குதித்து ஆடவும், திடீரென்று வேகமாக உள்ளே ஓடிவந்தான் கருவண்டு. கருவண்டுவைக்கண்டதும், பயந்து நடுங்கி ஆட்டத்தை நிறுத்தி ஒதுங்கினர்.


தலைமை ஆசிரியர் தங்கராசுவின், கை கால்கள் வெட வெடவென்று நடுங்கியது. அவர் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, திரைக்குப்பின்னே சென்றான் கருவண்டு. ஐந்து நிமிடத்துக்குப் பின் வெளியே வந்த தங்கராசு சார், வோட்டு திரும்ப எண்ணிப்பாத்தோம், வெங்கி மூணு ஓட்டுல தொத்துட்டான், ஜெயிச்சது சின்னு தான் அப்படின்னு ஒரே போடு போட்டார்.


பின்னாடியே வந்த கருவண்டு, சொல்லிட்டாருல்ல, கெளம்புங்க எல்லாரும், சின்னு தான் கேப்டன், என்று சொல்லவும், எல்லோரும் நிசப்தமாக கெளம்பினார்கள்.


அதுக்கப்புறம் ஒரு நாள், வெங்கி, இந்த எலெக்க்ஷன் ஒரு ஃபிராடு. என்னை எமாத்திட்டாங்கன்னான். சின்னியோட அப்பா சொன்னாரு "தோத்தவங்க ஏமாத்தத்துல இந்த மாதிரி பேசறது சகஜம்னு"


அதுக்கப்பறம், கிரிக்கெட்டு அனுபவமே இல்லாத கருவண்டுவுக்கு டீம்ல இடம் கெடச்சது வேற விஷயம்.

No comments: