Sunday, November 15, 2009

யாரிடம் சென்று முறையிடுவது

கலைஞர் கருணாநிதி, எக்காலமும் நெஞ்சுக்கு நீதி தேடும், பகுத்தறிவுப் பாசறையின் தானைத்தலைவர், புலம்பித் தவிக்கிறார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 'யாரிடம் சென்று முறையிடுவது'? என்று. நல்ல கேள்வி, அய்யா, நல்ல கேள்வி. யாரிடம் சென்று முறையிடுவது?



ஆனால் இந்த கேள்வியும் அதனுடன் கூடிய புலம்பலும், தங்கள் அரசின் கையாலாகாத் தனத்தைத் தான் தெளிவாகத் தெரிவிக்கிறது. இது போன்ற விஷயங்களில், நியாயமும், தெளிவான தொலை நோக்குப் பார்வையும் அவசியம் தேவை.



நியாயம் அல்லது நீதி என்ற சொல்லுக்கு உங்கள் அகராதியில் என்ன பொருள்? எதுவெல்லாம் பதவிகளைத் தக்க வைக்கின்றனவோ, எதுவெல்லொம் தங்கள் எல்லா மனைவிகளின் எல்லா செல்வங்களுக்கும் செல்வம் சேர்க்க வழி அமைக்கின்றனவோ, அவர்கள் மட்டுமல்லாது மற்றும் பல உறவினர்களுக்கும், பதவிகள், அதனுடன் சேரும் செல்வங்கள் சேர்க்க வழி செர்க்கின்றனவோ அவைகளே நீதிகள், நியாயங்கள். மறந்து விடாதீர்கள் கலைஞரே! சில மாதங்களுக்கு முன், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பதவிகள் வேண்டி பிரதமர் முன் மண்டியிடுவதில் மும்முரமாக இருந்த பொழுது இலங்கையில் பல்லாயிரம் தமிழர்கள் இதையே தான் கேட்டார்கள் - "யாரிடம் சென்று முறையிடுவது? தமிழனின் காவலர்கள் என்று பறை சாற்றுபவர்கள் பதவிகளுக்காக மண்டியிட்டு நிற்கும்போது, நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது என்று. இன்று இப்பொழுது இது உங்கள் முறை. ஆனால் உங்கள் புலம்பலுக்கு ஒரு அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.


தொலை நோக்குப் பார்வை. தொலை நோக்குப் பார்வை உங்களுக்கு நிச்சயம் உண்டு. எந்த விஷயங்களில் என்பது தான் கேள்வி. தங்களைப் போலவே பகுத்தறிவுப் பாசறையில் பிறந்து, தங்கள் காலத்தையும், முயற்சிகளையும், ஒரு எண்ணத்தொகுப்பின் மையமாக வைத்து, ஒரு சமுதாயக் குறிக்கோளுடன் தியாகங்கள் பல செய்து, அதற்கு ஈடாக எதுவுமே பெறாத பற்பல சிந்தனையாளர்கள், செயல் வீரர்கள் இருந்து இருக்கிறார்கள், இருக்கிறார்கள். அவர்கள் தொலை நோக்கு வெறும் இயக்கமும், சமுதாயம் சார்ந்ததுவாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் உங்கள் தொலை நோக்கோ பறந்து விரிந்த குடும்பம் சார்ந்தது. அந்த வகையில் நீங்கள் ஒரு சாதனையாளர்தான்.



இன்றைய புலம்பல் ஒரு ஆரம்பம் தான். கையாலாகாத்தனத்தின் ஒரு சிறிய வெளிப்பாடு. காலம் உருள உருள, உங்கள் வயது ஏற ஏற, கையாலாகாத்தனங்கள், அதற்குண்டான நிலைமைகள் மேலும் வளரும். உங்கள் தம் புலம்பல்களின் பெருக்கங்களுடன், நெஞ்சுக்கு நீதி ஒரு நாள் நிச்சயம் கிட்டும். நெஞ்சுக்கு நீதி கிடைக்கும் வரை நீண்ட வாழ்வு நீங்கள் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments: