Friday, January 2, 2009

தமிழகம் இந்தியாவிலேயே அமைதிக்கும், சிறந்த கல்விக்கும், பக்திக்கும், மக்களின் பண்பாட்டிற்கும் உதாரணமாக விளங்கிய நாட்கள் உண்டு. அப்பொழுதுதான் திராவிட இயக்கங்கள் ‘கழகம்’ என்ற பெயரில் காலூன்றின.

கழகத் தலைவர்கள் “வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது” என்று வடக்கு தெற்கு வேறுபாட்டு உணர்வினை ஆழமாக விதைத்தனர். இந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் தமிழ் சகோதர்களுக்கும், தமிழ் சகோதரிகளுக்கும் இன்னல் விளைவித்தனர். போராட்டம் என்ற போர்வையில், தன் உடன் பிறப்பு காவல் துறை அதிகாரிகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தனர். இந்தி ஒழிந்து விட்டது. தமிழ் வளர்ந்து விட்டது.

அது மட்டுமா! பிராமிணர்களை, பார்ப்பனர் என்றும், ஆரியர் என்றும் வெறுத்து ஒதுக்கினர். தமிழை, தமில் என்று சொல்லாமல் தமிழ் என்று சரியாகச் சொன்னதற்காக பூணூல் அறுபட்டனர்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று தாம் இழந்த குணங்களை தங்கள் சொத்தாகச் சொல்லி பொய் பேசி பசப்பினர். அவர்கள் விதைத்த விதைகள் வேரூன்றி வளர்ந்து ஆல மரங்களாக தழைத்து விட்டன. அரங்கேற்றங்கள் அவ்வப்பொழுது தொடர்கின்றன.

சட்டக்கல்லூரியில் நடந்த ரகளை, பத்திரிக்கை அலுவலகத்தில் புகுந்து அப்பாவி தொழிலாளர்களை அடித்து நொறுக்கி, கொன்று களித்த நிகழ்ச்சிகள், தற்சமயம் திருமங்கலத்தில் நடைபெறும் வெறியாட்டங்கள், தமிழ் நாட்டின் உண்மை நிலையின் சிற்சில வெளிப்பாடுகள். நிகழ் கால உண்மைகள் .

கழகங்களின் கையில் எதிர்கால தமிழ்நாடு, நினைக்கவே பதைக்கிறது மனம். தமிழ் அன்னையே நீதான் துணை. உன் பிள்ளையை, தமிழ் மண்ணை கயவர்களிடமிருந்து காப்பாற்று!
தமிழ் வாழ்க! தமிழன் வளர்க!

No comments: