Saturday, May 30, 2009

பழைய கதை, புதிய நினைவு


ஷிபு சோரேன் என்பவர் கொலை வழக்குகளில் குற்றவாளியாகி மத்திய மந்திரி சபையில் பதவி வகித்த நேரம் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டவர். மத்திய மந்திரி பதவி துறந்து பின் ஜார்கண்ட் மாநிலத்தின் முதல் மந்திரி ஆனார். இவ்வருடம் மாநிலத் தேர்தலில் பரிதாபமாகத் தோற்கடிக்கப்பட்டு பதவி இழந்தார். ஒரு சின்ன உதாரணம் - இந்திய நாட்டின் சட்டங்களை திரித்து, வளைத்து, குற்றங்கள் பல செய்து, உல்லாசமாக நாட்டில் உலவி வரும் பல ஆயிரம் இந்திய அரசியல்வாதிகளுக்கு.


சமீபத்தில் இவர் தம் மகன் தூக்கத்திலேயே மரணம் அடைந்தார். அந்த செய்தியைப் படித்தவுடன் எனக்கு ஞாபகம் வந்தது, நான் பல வருடங்கள் முன்னர் படித்த ஒரு உண்மைக் கதை. கவிஞர் கண்ணதாசன் எழுதியது. அவர் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பொழுதைய மாயவரம் சிறையில் இருந்தார். சிறையில், ஒரு கற்பழிப்பு, கொலை வழக்கில் ஐந்து பேர் சிறை தண்டனை அநுபவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் சொன்னான் - சத்தியமாக இந்த குற்றத்தை நான் செய்யவில்லை. ஆனால் பல வருடங்களுக்கு முன்னாள் இது போன்ற ஒரு குற்றத்தை செய்தேன் நான். அப்பொழுது தப்பித்து விட்டேன். பல வருடங்களுக்குப் பின்னர் இன்று நான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்கிறேன் என்றான்.


குற்றங்களை ஆய்பவர்கள் தவறு செய்யலாம். வழக்கறிஞர் தவறு செய்யலாம். நீதிபதி கூட பிழை செய்து விடலாம். ஆனால் எல்லாம் வல்ல இறைவன் தண்டிக்கத் தவறுவதில்லை.


ஷிபு சோரேன் அவர்களை கடவுள் கடுமையாகத் தண்டித்து விட்டார். நாம் கடவுளிடம் பணிவாக வேண்டுவோம் - "ஷிபு சோரேனுக்கு இனியாவது நல்லறிவு கொடுங்கள்" என்று.

No comments: