Friday, July 3, 2009

அப்பு குப்பு உரையாடல் 3

அப்பு, குப்பு மற்றும் வேறு வாடிக்கையாளர்கள் டீக்கடையில்

வாடிக்கையாளர்: தெரியுமாடா சேதி. நேத்து ராத்திரி ஆறுமுகம் வீட்டை கொள்ளை அடிச்சுட்டனுகளாம். நூத்தி இருபது பவுன் தங்கம், அம்பதாயிரம் ரொக்கம் கொள்ளை போயிடுச்சாம்.

வாடிக்கையாளர்: இந்த கணக்கு, ஆறுமுகம் வீட்டுக்காரங்க சொல்றது. உண்மையா கொள்ளை போனது எம்புட்டுன்னு யாருக்குத் தெரியும்?

அப்பு: மெதுவாக குப்புவிடம் "போலிசுக்கு மட்டும்தான் தெரியும்"

குப்பு: என்ன சொல்ற நீ?

அப்பு: ஏன்? நம்ப முடியலையா? நான் எல்லா போலீசையும் சொல்லல. ஆனா இந்தியாவுல, இந்த மாதிரி ஊர்கள்ல, எந்த குத்தவாளியும், போலீசுக்குத் தெரியாம எதுவும் செய்ய முடியாது.

குப்பு: நம்ப முடியலையே அப்பு.

அப்பு: இதுக்கு மேல சொல்றேன் கேளு. சில போலீசு காரங்களுக்கு குத்தம் நடக்கறதுக்கு முன்னையே இனஃபார்மேஷன் போயிடும்.


குப்பு: இன்னமும் என்னால இத நம்ப முடியல அப்பு.

அப்பு: எப்பவும், இந்தியால எல்லா எடத்திலயும், எப்பவும், இப்படித்தான் நடக்கறதுன்னு நான் சொல்ல வரல. ஆனா பல இடங்களில, பல நேரங்கள்ல இப்படித்தான் நடக்கிறது என்பது உண்மை.


குப்பு: உண்மையாவா!

அப்பு: நான் ஒரு தடவ மத்தியப் பிரதேச மாநிலத்தில, ஒரு வேலையா சுத்திக்கிட்டு இருந்தேன். அப்ப நான் கேட்ட ஒரு நிகழ்ச்சியக் கேளு. ஜபல்பூர் பக்கம்னு ஞாபகம். நடு ராத்திரில, அஞ்சு பேர் வழி மறிச்சு, ஒரு பஸ் பயணிகளை கொள்ளை அடிச்சிருக்காங்க. கலெக்க்ஷன் முடிஞ்ச பிறகு, மொத்த வசூல எண்ணிப்பாத்தவங்க, எல்லாப்பணத்தையும் பயணிகள்டயே கொடுத்துட்டு எறங்கிப் போயிட்டங்கலாம்.

குப்பு: என்ன அப்பு? என்ன சொல்ல வர? கிறுக்குத்தனமா இருக்கு.

அப்பு: குப்பு, இதப் புரிஞ்சிக்கறதுக்கு புத்திசாலித்தனம் வேணும். உனக்குப் புரியாது. பஸ்சில கெடச்ச மொத்த கலெக்க்ஷன், அவங்க போலீசுக்கு குடுக்க வேண்டிய கமிஷன விட ரொம்ப கொறச்சல். அது தான் விஷயம். அதனாலதான் வண்டிய விட்டு இறங்கரப்போ டிரைவருக்கு வார்னிங் குடுத்தாங்கலாம். அங்க இங்க வண்டிய நிறுத்தாம நேரா ஊருக்குப் போன்னு.



No comments: