Sunday, June 29, 2008

உரையாடல் 1

"என்ன கல்யாணி தசாவதாரம் சினிமா பாத்தியா?" மாமி கேட்கவும்,
கல்யாணி வேகமாக "யார் மாமி இவ்ளோ சீக்கிரம் டிகெட் வாங்கித்தருவா? அதுவுமில்லாம கமல விட பெரிய நடிகர் நம்மாத்திலேயே இருக்கும்போது தசாவதாரம் என்ன மாமி. எங்க ஆத்துக்காரர் தினம் பத்தென்ன, பதினஞ்சு, இருபது அவதாரம் எடுக்கும்போது, தசாவதாரம் எந்த மூலை மாமி" என்று பொரிஞ்சு தள்ளினாள்"
"என்ன சொல்ற, உங்க ஆத்துக்காரர் எவ்ளோ தங்கமான மனுஷர், வாயெல்லாம் சிரிப்பு, இனிமையான வார்த்தைகள்".
"இதுதான் மாமி, இதுதான் அவர் திறமை. காலம்பர பாருங்கோ, சின்ன மனஸ்தாபம், அதுக்காக முரட்டுத் தனமா என்னைப் பிடிச்சு தள்ளி, மண்டையில காயம்".
அவள் இதை சொல்லி முடிக்கவில்லை. கல்யாணியின் கணவன் சேகர் உள்ளே நுழைந்தான். "வாங்கோ மாமி, எப்படி இருக்கேள், மாமா எப்படி இருக்கார்?" என்று விசாரித்த கையோட,
"கல்யாணி, ஆயின்ட்மென்ட் ஏதாவது போட்டியா? இனிமேலாவது வேலையெல்லாம் பொறுமையாச் செய்யக் கத்துக்கோ. நீங்களும் சொல்லுங்கோ மாமி" என்று சொல்லிக் கொண்டே தன் அறையில் நுழைந்தான் சேகர்.

No comments: