Saturday, September 22, 2012

Money does not grow on trees. It comes from our Taxes

 பணம் மரங்களில் காய்ப்பதில்லை
எங்கள் வரிகளிலிருந்து வருகிறது 

பிரதமர் நேரடியாக நம் மக்களுடன் உரையாடப் போகிறார் என்று கேள்விப்பட்டதும் எதிர்பார்ப்பு அதிகமானது. காலையிலிருந்தே முன்னேற்பாடு. வேலைகள் அனைத்தையும் விரைவில் முடித்து விட்டு பிரதமர் பேச்சில் முழு கவனம் செலுத்த விழைவு. பேசப்போகிறவர் பிரதமர் மட்டுமல்ல. மெத்தப்படித்த பொருளாதார வல்லுநர். 1991 இல் நிதி மந்திரியாக இருந்து உயரிய பொருளாதார மாதிரிகளை முன் வைத்தவர். எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும். 

முதலில் ஹிந்தியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் பேசினார். பொருளாதார வல்லுநர் பேச்சைக் கேட்க அமர்ந்தவன் ஒரு சாதாரண அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். 

'பணம் மரங்களில் விளைவதில்லை' என்று கூறி வரி செலுத்தும் சாதாரண குடிமகனை விவரமற்றுக் கடிந்து கொண்டார். அவருக்கு அவர் தம் பேச்சை எழுதிக் கொடுத்தவர், இன்றைய நிலையில், குடிமக்களின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டவரில்லை என்பது புலனானது. தொடர்ந்து அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம், பெருமளவு பணவீக்கம், மற்றும் நாளும் தொடரும் கட்டுங்கடங்கா ஊழல்கள். இவற்றினிடையே, 

நாங்கள்,  பல்வேறு வகைகளில் நாளும் வரிகள் செலுத்தும் குடி மகன்கள்  உங்களைக் கடிந்து கொண்டிருக்க வேண்டும் - "பணம் மரங்களில் விளைவதில்லை. எங்கள் வரிகளிலிருந்து வருகிறது" என்று.  நாங்கள் உங்களைக் கட்டாயம் கடிந்து கொண்டிருக்க வேண்டும் "நீங்களும், உங்கள் மந்திரிகள் மற்றும் பல்துறை அதிகாரிகளும்  எங்கள் வரிப்பணத்தில் ஊழல் செய்யாதீர்கள், பணம் நிறையப் பெற்றுக்கொண்டு மிகவும் தரமற்ற ஆட்சியை எங்களுக்குத் தராதீர்கள்" என்று. ஆனால் மாற்றாக நீங்கள் எங்களைக் கடிந்து கொண்டீர்கள். வேடிக்கையாக இருக்கிறது. 

அது போகட்டும். முன்னதாக, பெட்ரோல் விலையேற்றத்தில் போது சொல்லப்பட்டது. "பெட்ரோல் உபயோகிப்போர் பணக்காரர்கள். சாதாரண குடிமகனுக்குத் தேவை டீசல். எனவே பெட்ரோல் விலையேற்றம். டீசல் விலை ஏற்றமில்லை" என்று. நேற்று இரவு சொன்னீர்கள் "டீசல் பெரும் பணக்காரர்கள் தங்கள் பெரிய கார்களில் உபயோகிக்கிறார்கள். பெட்ரோல் ஸ்கூட்டர் ஓட்டுபவர்களும், மோட்டார் பைக் ஓட்டுபவர்களும் உபயோகிக்கிறார்கள் என்று". ஏனிந்த முரண்பாடு. பெருவண்டிக்கு உபயோகப் படுத்தப்படும் டீசல் வெறும் 0.6 சதவிகிதம் மட்டுமே என்பது எனக்குத் தெரிந்த விவரம்.

45 வருடங்களுக்கு முன் என் முப்பாட்டி சொன்னாள்: "கலியுகம்டா இது கலியுகம். போகப்போகப் பாரு. பத்தினி என்று பாராட்டப் பட்டவள், காசுக்காக குறுக்கு வழியில் செல்வாள். படித்தவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் பொய் பேசித் திரிவார்கள்". நான் அன்று அவளை நம்பியிருக்கவில்லை. பாட்டி பாவம் சிறு பொது அறிவு கொண்டு பெரிதாகப் பகட்டித் திரிகிறாள் என்று. நேற்றிரவு உங்கள் பேச்சு முப்பாட்டியின் கலியுகக் கூற்றை உண்மையாக்கி விட்டது. எப்படி அய்யா, எப்படி உங்களால் கண்ணிமைக்காமல், இந்தக் கண்றாவியை பேச முடிந்தது. 

இதுவரை தங்கள் அமைச்சரவையைப் பற்றி யார் எது சொன்னாலும், உங்களிடம் ஒரு தனி மனிதர் என்கின்ற நிலையில், ஒரு தவிர்க்க முடியாத நம்பிக்கை என்றும் இருந்தது. 'ஊழல்வாதிகளால்  சூழப்ப் பட்டிருக்கும் ஒரு நேர்மையான மனிதர்' என்கின்ற பச்சாதாபம் இருந்தது. ஆனால் அவையனைத்தும் இன்று தங்கள் பேச்சுக்களால் தவிடு போடி. நன்றி அய்யா. நன்றி. தங்களின் தப்பான முகத்திரையை தாங்களே கிழித்தெறிந்ததற்கு.

1991 இல் தங்கள் செயல்பாடுகளை உதாரணம் காட்டினீர்கள். 1991 க்கும் 2012 க்குமிடையே எந்த ஒரு சமநிலையும் இல்லை. அன்று சோனியாஜி இருந்திருக்கவில்லை. 2ஜி, சி.டபிள்யூ.ஜி, சி.ஜி. இன்னும் பல, இதுவரை வெளிவராத ஜிக்கள் இருந்திருக்கவில்லை. தாங்களும் இதுபோல் தடுமாற்றத்தில், ஆட்சித் தடுமாற்றத்தைச் சொல்லவில்லை, நன்னெறித் தடுமாற்றத்தில் இருந்திருக்கவில்லை.

தங்களையும், இந்நாட்டையும், நாட்டு மக்களையும் கடவுள் என்றொருவர் இருந்தால் அவர் மட்டுமே காப்பாற்ற முடியும். வாழ்க! வளர்க!











No comments: