Monday, October 12, 2009

எதிர்காலத்தில் நாத்திகம் - ஒரு கற்பனை

கடந்த இருபத்து வருடங்களில், நமது இந்தியா பல விஷயங்களில், குறிப்பாக விஞ்ஞானத்தில் பெரு வளர்ச்சி அடைந்திருக்கிறது. ஆனால் கூடவே சாதி வெறியும், சாதிக்கலவரங்களும், மடங்களும், அம்மடங்களுடன் இணைந்த சாமியார்களும், தெற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு என்று எல்லா திசைகளிலும் வேகமாக வளர்ந்து நம்மை அச்சுறுத்தி இருக்கின்றன, அச்சுறுத்துகின்றன.


ஈசல் போன்று பெருகி வளர்ந்த அரசியல் கட்சிகள் மற்றும், அரசியல்வாதிகள் படுத்தும் பாடு போதாதென்று, இது போன்ற மடங்களும், சாமியார்களும் அடிக்கும் கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. அரசியல்வாதிகளும், இச்சாமியார்களும் இணைந்து பல கொள்ளைகளை நமது இந்தியாவில் அரங்கேற்றியுள்ளனர். முடிவில் இவ்விரு குலத்தினருமே, மக்களை மேலும் மேலும் முட்டாள்களாக்கி மேலும் மேலும் அவர்களை கொள்ளையடித்ததைத் தவிர இந்த நாட்டிற்காக எந்த ஒரு நன்மையும் செய்ததில்லை.


இவற்றுக்கு விதி விலக்கானவர்கள் ஒரு சிலர். அவர்களைப் பிரித்துக்காட்டுவது, இப்பொழுது என்னுடைய நோக்கம் அல்ல.


சரித்திரத்தை உற்று நோக்கிப்பார்க்கையில் எனக்குத் தெளிவானது, நாத்திகமும், பகுத்தறிவுப் பாசறையும் ஒரு மடம் தான். அந்த மடத்தில் உருவான சாமியார்கள் பலர் அரசியலில் சக்கை போடு போட்டு, அவர்களின் விரிவான குடும்பங்களை செல்வச்செழிப்பில் கொண்டு தக்க வைத்திருப்பது, தன்மானத் தனிழன் ஒவ்வொருவனுக்கும் தெரிந்த விஷயம் தான். தன்மானத் தமிழனுக்கு மேலும் தெரியும், பெரியார் .வே.ரா. தொலை நோக்கு கொண்டு, பேசிய பேச்சுக்கள், செய்த செயல்கள், அவர் வாழ் நாளிலேயே பலருக்கு பணம் பண்ணும் பாசறையாகி விட்டது என்பது.


இந்த யோசனையில் உதித்தது ஒரு கற்பனை:


அம்மா! அம்மா! என் ஃபிரெண்டு ஒருத்தன் ராஜா மணி சாமின்னு பேரும்மா. பெரியார் சாமியையும், மணியம்மை அம்மனையும் அவன் கும்பிடராம்மா. இந்த ரெண்டு சாமிகளும் நாம ஏம்மா கும்பிடரதில்லே?


அவங்க வேற மதம்டா! நம்ம மதத்தில அந்த சாமிங்கள கும்பிடரதில்லே!


அதெப்படியம்மா? அவுங்களும் ஹிந்து மதத்த சேர்ந்தவங்கதானே? என்ன நம்மள மாதிரி விபூதில்லாம் பூசரதில்லே. நம்ம பெரிய புராணம் படிக்கிறோம், அவுங்க பெரியார் புராணம், தினம் நூறு பார்ப்பன வசவுகள் படிக்கிறாங்க. இது தானேம்மா வித்தியாசம்.


அதில்லடா. பெரியார் சாமி இந்த பூமில ஈ. வே. ராமசாமி நாயக்கரா அவதரித்த போது நாத்திக மதம்னு ஒரு மதத்த ஆரம்பிச்சாரு. அந்த மதத்துல இருந்தவங்களுக்கு, சில கடுமையான விதிகள் இருந்துச்சு. கருப்பு சட்ட போடணும், கருப்பு துண்டு போர்த்தனும், நெத்தில விபூதி, குங்குமம் இதெல்லாம் இடக்கூடாது. பெண்கள் கல்யாணம் ஆனாலும், ஐயற கூப்பிட்டு, ஹோமம் வளக்கறது, தாலி கட்டறது இதெல்லாம் கூடாது.


கல்யாணத்துல பின்ன வேற என்னம்மா செய்வாங்க?


அதுவா! பெரியார் சாமியோட பக்தர் யாரையாவது கூப்பிட்டு அவர் தலைமையில கல்யாணத்த நடத்துவாங்க. அந்த பக்தரும், ஒரு அரை மணி நேரம் பார்ப்பன வசவுப்பேச்சு, கடவுள் இல்லை பேச்சு பேசி கல்யாணத்தை முடித்துக் கொடுப்பார்.



ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருக்கு - இன்னும் சொல்லுங்க அம்மா



தலைக்கு மேல வேல இருக்குடா. அடுத்த ஞாயித்திக்கிழம மத்தியானம் வீட்ல தான இருப்ப அப்ப சொல்றேன்



No comments: